சிறையில் பிளஸ் 2 தேர்வெழுதிய, தண்டனைக் கைதிகள் 35 பேரும், வெற்றி பெற்றனர். ராஜிவ் கொலையாளி பேரறிவாளன், 1096 மதிப்பெண் பெற்று, சிறைக் கைதிகளில் முதலிடம் பெற்றுள்ளார்.
கடந்த மார்ச் 8ம் தேதி முதல், 30ம் தேதி வரை, பிளஸ் 2 பொதுத் தேர்வு நடந்தது. மொத்தம், 7.60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், இத்தேர்வை எழுதினர். இதில், புழல், வேலூர், மதுரை, கோவை மத்திய சிறைகளில் உள்ள 35 தண்டனை கைதிகளும் அடக்கம். மறைந்த பிரதமர் ராஜிவ் கொலையாளியான பேரறிவாளன், முருகன் ஆகியோரும், இத்தேர்வை எழுதினர். புழல் சிறையில் இருந்து ஒன்பது பேர், வேலூர் சிறையில் இருந்து எட்டு பேர், மதுரையில் இருந்து 10 பேர், கோவையில் இருந்து எட்டு பேர் தேர்வுக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். பேரறிவாளன், முருகன் தவிர மற்றவர்கள் அனைவரும், புழல் சிறையில் தேர்வெழுதினர். அவர்கள் இருவரும், அடைக்கப்பட்ட வேலூர் சிறையில் எழுத அனுமதிக்கப் பட்டனர். வணிகவியல்: இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், சிறையில் இருந்தபடி தேர்வெழுதிய தண்டனைக் கைதிகள் அனைவரும் வெற்றி பெற்றனர். இதில், வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், 1200க்கு 1096 மதிப்பெண் பெற்றார். மதுரை சிறையில் இருக்கும் தண்டனைக் கைதியான சவுந்திரபாண்டி, 1080 மதிப்பெண்களும், புழல் சிறையில் உள்ள முனுசாமி, 988 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர். அனைவரும் வணிகவியல் குரூப் எடுத்து படித்தனர். சிறைக் கைதிகளில் முதலிடம் பெற்ற பேரறிவாளன், தமிழில் 185, ஆங்கிலத்தில் 169, வரலாற்றில் 183, பொருளாதாரத்தில் 182, வணிகவியலில் 198. கணக்குப் பதிவியலில் 179 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கடந்தாண்டு, இதேபோல் 19 பேர் தேர்வு எழுதி, அனைவரும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக