கண்டி, கட்டுகஸ்தோட்ட காவற்றுறைப் பிரிவைச் சேர்ந்த குருந்துகஹமட கிராமத்தில் ஒரு தாயும் அவரது மகளும் சிறிலங்கா இராணுவக் கொமாண்டோவால் கொல்லப்பட்டுள்ளனர்.
இதன்பின்னர் கொமாண்டோவுடன் தொடர்புவைத்திருந்த பெண்ணின் சகோதரரினால் தடியால் அடித்துக் காயப்படுத்தப்பட்ட நிலையில் இவர் பின்னர் கண்டி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கொமாண்டோவினால் அப்பெண்ணின் தந்தையும் சுடப்பட்டிருந்தார்.
ரஞ்சனி எக்கநாயக்க மற்றும் அவரது மகள் நிரோஷா ஜயசூரிய ஆகியோரே இறந்தவர்கள் எனக் காவற்றுறை தெரிவித்துள்ளது. காயமடைந்த தந்தை சரத் ஜயசூரிய (52) மற்றும் கொலைசெய்த கொமாண்டோவான உபாலி பிரியந்தவும் கண்டிப் பொதுவைத்தியசாலையின் அதிதீவிரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைச்சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட T-56 சுடுகலன் காவற்றுறையால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணைகளின்படி தனது காதல் விடயமாக இராணுவச் சிப்பாய் முன்பு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் இதுவே பின்னர் வன்முறைக்கு வழிவகுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் வெள்ளியன்று காலை 5.10 மணிக்கு இடம்பெற்றுள்ளது. சிப்பாய் அவரது காதலியின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டியபோது அதனை அவரது தந்தை திறந்துள்ளார். உடனடியாகவே அவரைச் சுட்டுவிட்டு அச்சத்தம் கேட்டு அங்கு விரைந்துவந்த தாயையும் மகளையும் சுட்டிருக்கின்றார்.
இதன்பின்னர் தன்னைத்தானே சுட முயற்சித்தபோது காதலியின் சகோதரர் வந்து அவரைத் தாக்கி அவரது தலையில் அடித்ததால் குறிதவறிவிட்டதாகவும் காவற்றுறையினர் தெரிவித்தனர்.
இதுபற்றிய மேலதிக விசாரணைகளைக் கட்டுகஸ்தோட்ட காவற்றுறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக