கடற்றொழிக்குச் செல்பவர்கள் மீண்டும் முன்னரைப் போன்று கடற்படையினரின் “பாஸ்’ அனுமதியைப் பெற்றே தொழிலுக்குச் செல்ல முடியும் என்று மாதகல் பகுதி கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
கடற்படையினரின் இந்த திடீர் நடைமுறை காரணமாக அந்தப் பகுதி மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாது திண்டாடி வருவதாகக் கூறப்படுகிறது. குறித்த பாஸ் அனுமதியைப் பெறுவதற்காக கடற் றொழிலாளர்களின் புகைப்படங்கள், அவர்களின் விவரங்கள், கடற்றொழில் உபகரணங்களின் விவரங்கள் ஆகியவற்றைக் கடற்படையினரிடம் கையளிக்க வேண்டும் என்றும் கடற்படையினர் கண்டிப்பான கட்டளையிட்டுள்ளனர்.
இதேவேளை, குருநகர் பகுதியிலும் இத்தகைய பாஸ் நடைமுறை கடற்படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மீளவும் ஆரம்பிக்கப்படும் இந்த பாஸ் நடைமுறையால் பல்வேறு சிரமங்களை தாம் எதிர்கொள்ள நேரிடுவதாக கடற்றொழிலாளர்கள் விசனம் தெரிவித்தனர்.
போர் முடிவுக்கு வந்த சில மாதங்களில் கடல்வலயத் தடைச் சட்டத்தை அரசு முற்றாக விலக்கியிருந்தது. அதன்பின்னர் படையினரிடம் பாஸ் பெற்று கடற்றொழிலுக்குச் செல்லும் நடைமுறை முடிவுக்கு வந்திருந்தது.
எனினும் தற்போது திடீரென மீண்டும் பாஸ் நடைமுறையை கடற்படையினர் நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருப்பது மீனவரிடத்தே அச்சத்தை உண்டு பண்ணியுள்ளதுடன், அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக